தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால் - அதனை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்.
தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்; மானொத்த பெண்ணடி என்பான் - சற்று மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான்.
தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை அழஅழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள்; குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்குவைப்பான்.
தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்; வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்.
தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. புல்லாங் குழல்கொண்டு வருவான்! - அமுது பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்; கள்ளால் மயங்குவது போலே - அதைக் கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.
தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன் ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்; எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன் எங்களைச்செய்கின்ற வேடிக்கையொன்றோ?
தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில் வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்; இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான்.
தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே, எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில் யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான்.