மறவேன் மறவே னென்று வேலின்மேல் ஆணையிட்ட
மன்னரும் மறப்பாரோ - நீல மயிலே!
உருகி உருகி உள்ளம் அவரை நினைவதையும்
உயிரும் கரைவதையும் - அறியாரோ மயிலே?
அன்பர் வரவு நோக்கி இங்கு நான் காத்திருக்க
அன்ன நடை பயில்வாயோ - வண்ண மயிலே!
பெம்மன் உன் மேலே வரும் பெருமிதம் தலைக்கேறி
பாதையை மறந்தாயோ - பேதை மயிலே!
வன்மம் மனதில் கொண்டு வஞ்சம் தீர்க்க நினைத்து
வழியில் உறங்கினாயோ - வாழி நீ மயிலே!
தன்னிகரில்லாதான் தனயர்பால் மையல் கொண்ட
மங்கைமீ திரங்காயோ - தங்க மயிலே!
சொன்னாலும் நீ அறியாய் சொந்த அறிவுமில்லாய்
உன்னை நொந் தாவதென்ன?- வன்கண் மயிலே!
மண்ணும் கரிபரிகள் புவியில் பல இருக்க
உன்னை ஊர்தியாய் கொண்டார் - தன்னையே நோகவேணும்!